Saturday 14 April 2018

இஷ்ரத் ஜஹான் -கௌஸர் பி -ஆஷிபா


ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடத்தி,அடைத்து வைக்கப்பட்டு ,மயக்கம் கொடுத்து காவல்துறையினர் உட்பட பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆசிபா சிறுமியாக அதுவும் குழந்தையாக இருந்ததால் தீவிரவாதியாக மாற்றப்படவில்லை.இதற்கு முன் இதே போல கொடூரமாக கொலை செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் ,கௌஸர் பி மற்றும் ஆசிபா கொலைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் கிடையாது.
ஆனால் அந்த கொலைகளின் காரணகர்த்தாக்கள் இதனை மெடல் போல அணிந்து தேர்தல்களில் மகத்தான வெற்றி அடைந்து நாட்டை ஆளும் இடத்தில அமர்ந்து இருப்பதை தெளிவாக மறைத்து விட்டு கடும் தண்டனை கொடுத்தால் ,குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்தால்,இவற்றை குற்றமாக பார்க்காத மாநில அமைச்சர்கள் பதவி விலகினால் சரியான தண்டனை கிடைத்ததை போன்ற பிம்பத்தை உருவாக்க பல நடுநிலையாளர்கள் வழக்கம் போல முழுமுயற்சி எடுக்கிறார்கள்.
கணவனோடு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை , ஒரு சிறு வழக்கில் கூட சந்தேகப்படும் குற்றவாளியாக இல்லாத கல்லூரி மாணவியை ஆசிபா போல கொடூரமாக கொன்ற கூட்டத்தின் ஆட்சியில் இதை போன்ற கொடூரங்கள் நடைபெறுவது ஆச்சரியமா என்ன ?
கௌஸர் பி வழக்கை விசாரித்து வந்த நீதிபதிக்கு ஏற்பட்ட முடிவு உணர்த்தும் செய்தி என்ன ?ஒட்டுமொத்தமாக ஒரு பெருங்கூட்டத்தை இது போன்ற கொடூர குற்றங்களை புரிவதை மதத்துக்காக,தேசத்துக்காக செய்யும் அரும்பெரும் செயல் போல உருவாக்கி வைத்திருக்கும் சங்க பரிவாரங்கள் சக்தி பயம் தருகிறது.
இதனை அந்த மதத்துக்காரர்கள் செய்யவில்லையா?இந்த மாநிலத்தில் நடக்கவில்லையா?அந்த நாட்டில் நடக்கவில்லையா என்று எளிதாக மடைமாற்றும் ஆற்றல் வேதனையை தருகிறது.பழங்குடி இனத்தை சார்ந்த ஒருவர் தங்கள் சாதி,மதத்தை சார்ந்த மக்கள் வசிக்கும் இடத்தில நிலம் வாங்கியதை மூர்க்கமாக எதிர்த்தவர் தான் முக்கிய குற்றவாளி என்பதை படித்தால் இந்த கொடூர செயலுக்கான உளவியல் காரணம் விளங்கும்.
பிரிவினை கொடூரங்களோ,காதலுக்கு எதிரான ஒரே கோத்திர ,சாதி ஆணவ கொலைகளோ ,மாட்டுக்கறியா சாப்பிடுகிறாய் என்று கொலை செய்யும் நிகழ்வுகளோ ,இதற்கு பின்னே இருப்பது மாற்று கருத்து,உணவு,மதம்,கடவுள் ,மொழி மீதான வெறுப்புணர்வு தான்.இது தரும் ஜஸ்டிபிகேஷன் தான் எந்தவித குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் கொலைகளை,பாலியல் வன்முறைகளை புரிய வைக்கிறது.

சீருடை பணியாளர் எனும் ஆண்ட சாதி



 மக்கள் ஆட்சி,மன்னர் ஆட்சி,சர்வாதிகாரம் என எதுவாக இருந்தாலும் ஆண்ட சாதி சீருடை பணியாளர் தான்.இதனை மாற்றாதவரை கொடூர குற்றங்களும்,குரூரத்தின் உச்சங்களும் குறையாது.

 கடுமையான தண்டனைகள் குற்றங்களை குறைக்கும் என்ற போலியான ஆனால் பெரும்பான்மை மக்களால் நம்பப்படும் கருத்தே இந்த ஆண்ட @ஆணவ சாதிக்கு இன்னும்  அதிக அதிகாரம் கொடுக்க செய்யப்படும் பிரச்சாரம் தான்.எந்த குரூர குற்றமாக இருந்தாலும் அங்கு சீருடை பணியாளரின் பங்கு இல்லாமல் இருக்கவே இருக்காது.

  இதனை மாற்ற ,குற்றங்கள் குறைய முதலில் காவல்துறை,ராணுவம் என அனைத்திலும் பாதிக்கு பாதி பெண்கள் வர வேண்டும்.பயிற்சியில் பல மாற்றங்கள் வர வேண்டும்.இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.எந்த காவல் நிலையமாக,ராணுவ யூனிட்டாக இருந்தாலும் எந்தவொரு மதம்,சாதி குழுவின் ஆதிக்கமும் இல்லாத சூழல் உருவாக வேண்டும்.

  சட்டத்துக்கு புறம்பான குரூரங்களை குற்றவாளிகளை பிடிக்க உதவும் வழிகள் என்று செய்வதை ஆதரிக்கும் போக்கு முழுமையாக மறைய வேண்டும் .என் குஞ்சை பார்க்கும் போது கூட அங்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட பல நூறு இளைஞர்களின் அலறல் நினைவுக்கு கொண்டு வரும் குற்ற உணர்ச்சியை ஆண்டுகள் பல கடந்தாலும் மறக்க முடியவில்லை

 இன்னொரு பக்கமாக  சாலையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடிப்பில் மாட்டி கொண்ட சக ஆபிசர் ஒருவருக்கு தினமும் சிறுநீர் போகவே மேல் மெட்டல் cathether மூலம் தான் முடியும். வெடிகுண்டால் தூளான ஆணுறுப்புக்கு பதிலாக  அறுவை சிகிச்சை மூலம் சிறு தோல் சார்ந்த பள்ளம் மட்டுமே அவருக்கு 32 வயதில் கிடைத்த பரிசு..

 எதற்காக போர்,போராட்டம் ,கொலைகள் என்ற எண்ணம் வலுப்பட வேண்டும்,.எதனையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கும் சூழலை நோக்கி முன்னேற வேண்டும்.மதம்,சாதி,தேசியம், மொழி என எதனையும் வெறியோடு தன் குழந்தைகள் மீது கூட திணிப்பது பெரும் வன்முறை என்று எண்ணம் வலுப்பெற வேண்டும்.இந்த எண்ணம் கொண்டவர்களே சீருடை பணியாளர்களாக வர வேண்டும்.

 தனி நபர் குற்றங்களுக்கும் சீருடை பணியாளர் பங்கு பெரும் குற்றங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு.இது புரியாத ஆன்மீக முட்டாள்களுக்கு அரசியல் மீது ஆசை வராமல் இருக்க வேண்டும்.இது சமூகத்திற்கு இழைக்கும் அநீதியின் ஆழம் அனைவர்க்கும் புரியும் சூழல் வர வேண்டும்.

Sunday 1 April 2018

கற்பு,புனிதம்,தேசியம்

தேசியவாதம் என்பது கொடிய நோய்.அது இருந்தால் மற்ற நல்ல குணங்கள் அனைத்தும் அழிந்து விடும்.மாற்று கருத்து உள்ளவர்களை  மதிக்காமல் மிதிப்பது தான் தேசியவாதம் என்று அழைக்கப்படுகிறது.கற்பு புனிதம்,தேசியம்,அதற்காக உயிரையும் இழப்பேன்  என்று பேசுவதெல்லாம் ஒரு வகை மன நோய் தான்.

  ஒன்றாக இருப்பதால்,கூட்டமைப்பாக இருந்தால் என்ன நன்மைகள்,தனியானால் என்ன பாதிப்புகள் என்று தேசியம் பேசுவோர் பேசினால்,விளக்கினால் அர்த்தம் உண்டு. விடுதலை என்பதே ஒரு ஏமாற்று வேலை மதவெறி,சாதி,இனவெறி போட்டு கொள்ளும் முகமூடி என்றால் நியாயம்.அதை விட்டு விட்டு எங்கு பிறந்து என்ன சிந்தனை.இதனை சிந்தித்தாலே கொலை செய்து விடுவேன் என்று துடிக்கும் ஆணவ கொலை
கூட்டம் போல கோவம் கொண்டு குதிப்பது நியாயமா

   பிரிவினை கோருதல் எனும் உரிமை மணமுறிவு போன்ற ஒன்று தானே .நியாயமான காரணங்களுக்காகவோ அநியாயமான காரணங்களுக்காகவோ கேட்க கூட உரிமை உண்டு என்பதை வலியுறுத்த தான் மக்கள் ஆட்சியையும்,சட்டங்களும் உருவாக்கப்பட்டன.முதிர்ச்சி அடைந்த மக்கள் ஆட்சிகளில் அதற்கு வழி இருக்க வேண்டும் என்று தானே நாகரீக சமூகம் போராட வேண்டும்.

இந்து சனாதனி போல மணமுறிவு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இது இறைவன் போட்ட முடிச்சு என்று நடுநிலையாளர்கள் மற்றும் தேசியவாதிகள்  ஆடும் வெறியாட்டம் உண்மையில்  விளங்கவில்லை.சீக்கியர்கள்,நாகா ,குக்கி,சோரன்,காஷ்மீரி ,மலையாளி,அந்தமான் வாழ் ஜராவா இன மக்கள்,கன்னடியர்கள் ,தமிழர்கள் என பலரின் கூட்டமைப்பு தானே இந்தியா.இவர்கள் ஒட்டுமொத்தமாக சம உரிமைகள் அல்லது தனிவாழ்வு என்று முடிவெடுத்தால் யார் தடுக்க முடியும்

வன்முறை இல்லாமல் இந்த மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாதா என்ன ?முதிர்ச்சி அடைந்த மக்கள் ஆட்சி அதனை நோக்கி தானே செல்ல முடியும்

    நாகாலாந்து மக்களின் போராட்டத்தை தமிழர்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றோ வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு  தனி நாடு கோரும் சூழலுக்கு தள்ளப்படுகிறது எனும் கோசத்தை நாகா  இன மக்களும் காஷ்மீரிகளும், சீக்கியர்களும்,குக்கி இன மக்களும் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா ?ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டமைப்பை பிரிவில்லாத ஒத்த சிந்தனை உள்ள குழு போல அகண்ட பாரத கோஷ்டி தான் பேசும் என்று நினைத்தால் தேசியவாதிகள் என்ற போர்வையில் மற்றவர்களும் வெறியாட்டம் ஆடுவது வேதனை தான்

  பெண்ணாக பிறந்தவள் ஆணை நம்பி தான் வாழ வேண்டும் என்பது போல மத்திய அரசை ஆணாகவும் ,மாநில அரசுகளை பெண்ணாகவும் உருவகப்படுத்தி ,எவ்வளவு துணிச்சல் கொழுப்பு இருந்தால் ,பிரிந்து செல்வேன் என்று சொல்வாய்.என் கை பூப்பறித்து கொண்டு இருக்காது என்று  தேசியவாதிகள் ஆடும் வெறியாட்டம் அச்சமூட்டுகிறது ஒருபுறம் என்றால்

  மறுபுறம் நாங்கள் நினைத்தால் இன்றே கிடைத்து விடும் தனி நாடு என்று கிசுகிசு மூட்டும் கூட்டம் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகிறது.சமூக வலைத்தளங்களில் சம உரிமை கொடு,தீர்ப்பை அமுல்படுத்த,மாநிலத்துக்கு உரிய பங்கை ,சுயாட்சியை கொடு அல்லது பிரிந்து செல்வோம் என்ற குரல் வந்தால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் ஆட்சி அமையும் சூழலை நோக்கி செல்ல வேண்டிய தூரம் வெகு வெகு அதிகம்.

  அந்த நாளுக்காக போராட வேண்டிய வழியே வேறு.அரசு இயந்திரம் மிருகத்தனத்தின் உச்சம்.நாகா இன மக்கள்,சீக்கியர்கள்,காஷ்மீரிகளை என பல ஆண்டுகளாக பல ஆயிரம் உயிர்கள் பலியானது தான் மிச்சம்.ஈழத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடந்த கொடூரங்களை,படுகொலைகளை கண்டு ரசித்த அரசு இயந்திரங்கள்,ராணுவங்கள் தான் மிக மிக பெரும்பான்மை.இது தான் நிதர்சனமான உண்மை

  பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கேட்டு போராடிய குழுக்களின் பிரதிநிதிகளே பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்கள்.சீக்கியர் அடையாளமான கத்தியோடு தான் பாராளுமன்றத்துக்குள் வருவேன் என்று ,அனுமதி மறுக்கப்பட்டதால் பாரளுமன்றத்துக்கு செல்லவும் மறுத்தார்கள்.மத்திய அரசு நடத்திய சட்டமன்ற தேர்தலில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மக்களே வாக்களிக்கும் சூழல் நிலவியது.இந்த குறைந்த வாக்குகளின் அடிப்படையில்  வெற்றி பெற்றவர்களை வைத்து உருவான அரசு காவல்துறை ,ராணுவம் துணை கொண்டு ஆடிய வேட்டையில் பல ஆயிரம் இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.இதில் மிக பெரும்பான்மையானோர் எதனோடும் தொடர்பில்லாத அப்பாவிகள் தான்.