Thursday 2 August 2018

சுயமரியாதை


சுயமரியாதை என்ற சொல் கடவுள் நம்பிக்கை என்ற மூடநம்பிக்கைக்கு நேர் எதிரான ஒன்று.சுயம் என்ற ஒன்றே கிடையாது. சரணாகதி அடையாவிட்டால் பெரும் கேடு தான் என்று மிரட்டுவது தான் மதம்.கடவுள் சடங்குகள் .கடவுள் நம்பிக்கை உடைய ஒருவர் சுயமரியாதையோடு இருப்பார் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.
ஆண் என்றால் என்ன உரிமை உண்டு ,பெண் என்றால் எவ்வளவு பணிவு ,கீழ்ப்படிதல்,ஒதுங்கி வாழ்தல்,மறைந்து வாழ்தல் இருக்க வேண்டும்.எந்த வர்ணத்துக்கு என்ன மரியாதை தர வேண்டும்,யாரிடம் கோவப்படலாம்,யாரிடம் என்ன செய்தாலும் பணிவாக இருக்க வேண்டும் என்பது தான் இந்து மதம்.இந்த அழகில் இந்து மத நம்பிக்கை கொண்ட ஒருவரை பார்த்து சுயமரியாதைக்கு இழுக்கு என்று சொன்னால் திருதிரு என்று விழிக்காமல் என்ன செய்வார்.
மாண்புமிகு துணை முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வராக முதன் முதலில் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்ட போதே இதற்கு தயார் செய்யப்பட்டவர்.அவரை யார் யார் எப்படி இழிவுபடுத்தினார்கள் என்ற முழு தகவல்களையும் அவர் சொன்னால் சசிகலா அவர்கள்,தினகரன்.திவாகரன் அவர்களின் அடுத்த தலைமுறை என அனைவரும் அமைச்சர் நிர்மலா சீதாராமனை மிஞ்சிய கதை தெரியும்
குறிப்பிட்ட பதவிகளில் இருப்பவர்கள்,தனக்கு பதவி கிடைக்க காரணமாக இருப்பவர்கள் அவர்களை உடன்பிறந்த உறவுகள்,உடன்பிறவா உறவுகள் எபப்டி வேண்டுமானாலும் தன்னை மட்டம் தட்டலாம்,உதாசீனம் செய்யயலாம்,இழிவுபடுத்தலாம் என்பதை தான் அவரின் இந்து மத நம்பிக்கை அவருக்கு கற்று தந்திருக்கிறது.அவரை பார்த்து அவரை போல இந்துமத நம்பிக்கை உள்ள மக்கள் சுயமரியாதை என்று பேசுவது தான் வியப்பாக இருக்கிறது
மத நம்பிக்கை உடைய பெண்ணிடம் சென்று மாத உத்திர போக்கு தீட்டு என்று கருதுவது,கடவுளை வழிபட அந்த நாட்களில் கோவிலுக்கு செல்வது கடவுளுக்கு கோவம் தரும்,கடவுளை அவமானப்படுத்தும் செயல் என்று எண்ணுவது தவறு என்று சொன்னால் அவருக்கு வரும் அதே கோவம் தான் காலில் விழும் அமைச்சர்கள் முதல் உதாசீனம் செய்யப்பட்ட துணை முதல்வர் வரை வரும்.
சாமிக்கு ,வரம் தரும் சாமிக்கு,சாமியின் பூசாரிகளுக்கு, கடவுளாக தங்களை பாவித்து கொண்டு பாவ மன்னிப்பு தரும் பாதிரியார்களுக்கு , விசிறி சாமியார்களுக்கு ,ஜீயர்களுக்கு , பத்வா தரும் மௌல்விகளுக்கு எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ள,கோவித்து கொள்ள,தண்டிக்க உரிமை உண்டு எனும் நம்பிக்கையை தகர்க்காமல் ஆணும் பெண்ணும் சமம்,சாதி ,தீண்டாமை எல்லாம் ஒழியும் என்று நினைப்பது மூட நமபிக்கை தான்.
சுயமரியாதை என்பது சரணாகதி என்பதன் நேர் எதிர் நிலை.எந்த மத நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் சுயமரியாதைக்கும் சிறிது கூட தொடர்பு கிடையாது

என் வங்கி கணக்கில் ஒரு கோடி போட்டவரய்யா கலைஞர்



ரூபாய்க்கு மூன்று படி என்று சொல்லி ஆட்சியை பிடித்தார்கள்.ஆனால் கொடுத்தார்களா என்ற கிண்டலுக்கு பதிலாக இலவசமாக மாதாமாதம் குடும்பத்துக்கு பத்து படி கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியவர்.தமிழ்நாட்டை விட பல மடங்கு வருவாய் உள்ள மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்கள் யோசிக்க கூட தயங்கும் நிலையில் இதனை எளிதாக நிறைவேற்றியவர் கலைஞர்.
திமுகவை அவரின் கடைசி தேர்தலில் தோற்கடித்தது தமிழகம் அல்ல.கொங்கு பகுதி தான். அங்கு குறிப்பிடத்தக்க சதவீதம் உள்ள கொங்கு வெள்ளாளரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி,வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடிக்க காரணமாக இருந்தவர் கலைஞர். அங்கு குறிப்பிடத்தக்க சதவீதம் உள்ள இன்னொரு சமூகம் அருந்ததியர் சமூகம்.நாடெங்கும் பட்டியல் இனத்தின் உள்ளே முயற்சிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு நிறைவேற இன்றுவரை ஆயிரம் தடைகள் இருக்க ,அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எளிமையாக உறுதியோடு நிறைவேற்றி இன்றுவரை வெற்றிகரமாக தொடர காரணம் கலைஞர் .
மத அடிப்படையில் இட ஒதுக்கீடா,இட ஒதுக்கீடு தவறு .அப்படி கொடுத்தாலும் இட ஒதுக்கீடு இந்துக்களுக்கு மட்டுமே என்று கொதிக்கும் இந்துமதவெறி கூட்டம் இன்றும் அதிகமாக இருக்கும் சூழலில் கூட இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து அது வெற்றிகரமாக தொடர காரணம் கலைஞர்.
கலைஞரை அதிகம் திட்டிய சாதி தலைவர்களில் வன்னியர்களுக்கு எளிதாக முதலிடம் கிடைக்கும் .வன்னியர்களை,மீனவர்களையும் ,சீர்மரபினரையும் தனி பிரிவாக்கி இருவது சதவீத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி நிறைவேற்றியவர் கலைஞர் .
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது முட்டாள்தனம் என்று இன்றுவரை சொல்லும் கூட்டமே நாடெங்கும் அதிகமாக இருக்க ,இதனை முப்பது ஆண்டுகளுக்கு சாத்தியமாக்கியவர் கலைஞர்
மூன்று மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பதை பெரும் மாற்றமாக முன்வைக்கும் மதவெறி கூட்ட தலைவனின் வெட்டி பேச்சுக்களுக்கு இருவது ஆண்டுகளுக்கு முன்பே மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி என்று திட்டமிட்டு அதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர். இன்றும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.
பட்டதாரி இல்லா குடும்பங்களை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு இதன் அடிப்படையில் முற்பட்டோர் உட்பட ஐந்து ஊக்க மதிப்பெண்கள் தந்த அரசு கலைஞரின் அரசு. அதனை சாதிவெறி நீதிமன்றங்கள் அடிக்க அதன் அடிப்படையில் இன்றுவரை கட்டண சலுகை ,ஸ்காலர்ஷிப் தரும் மாநிலம் தமிழ்நாடு
கிராமப்புற மாணவர்களுக்காக கிராமப்புற இட ஒதுக்கீடு கொண்டு வந்த அரசு கலைஞரின் அரசு தான் .இதனால் பலனடைந்து மாணவர்களை கண்டு வெறுப்புக்கொண்ட நீதிமன்றங்கள் இத்தனையும் நிராகரிக்க மனம் தளராத விக்ரமன் போல நுழைவு தேர்வு பெண்களுக்கு,கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு தடையாக இருப்பதால் அதனை நீக்கியவர் கலைஞர் தான்
அற்புத நுழைவு தேர்வுகளின் காரணமாக IITJEE போன்ற தேர்வுகளில் மாணவிகள் வெறும் எட்டு சதவீத இடங்களை பிடிக்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடித்து அவர்களுக்கு கூடுதல் இடங்களாக 14 சதவீதம் என்று கல்வியில் ஒதுக்க முயற்சிப்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன் பணிகளில் சாதித்த அரசு கலைஞரின் அரசு.அரசு பணிகளில் பெண்களுக்கு முப்பது சதவீதம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்ட அரசு கலைஞரின் அரசு
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் குறைய ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியைகள் மட்டும் தான் என்று உத்தரவிட்டு நிறைவேற்றிய அரசு கலைஞரின் அரசு. இன்றும் மத்திய அரசு பள்ளிகளிலோ ,மற்ற மாநிலங்களிலோ இந்த நிலை கிடையாது.தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களில் நான்கில் மூன்று பங்கு பெண்களுக்கு தான் எனும் சூழலுக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் .
இன்றும் மத்திய அரசு பள்ளிகளில் ,பல ஆயிரம் கோடிகளை வடமொழிக்கும்,இந்திக்கும் ஒதுக்கும் அரசு பள்ளிகளில் படிக்க ஆண்டுக்கு சில ஆயிரம் கட்டணம் உண்டு.ஆனால் அரசு பள்ளிகளில்,நகராட்சி பள்ளிகளில்,அரசு உதவி பெரும் பள்ளிகளில் பள்ளி படிப்பு,புத்தகம்,சீருடை,உணவு,முட்டை ,சைக்கிள் முதல் லேப்டாப் வரை இலவசமாக கிடைக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் .இதில் பெரும்பான்மை நலத்திட்டங்களுக்கு முக்கிய காரணம் கலைஞர்
தாய் தந்தை இருவரில் யார் சாதியை வேண்டுமானாலும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள் எடுத்து கொள்ளலாம் என 44 ஆண்டுகளுக்கு முன் சட்டம் போட்டவர் கலைஞர்.அதனை மூர்க்கமாக இன்றுவரை மறுப்பவை சாதிவெறி நீதிமன்றங்கள் .சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கொடுத்த அரசு கலைஞரின் அரசு .வழக்கம் போல அதனை வெறி கொண்டு அழித்த கூட்டத்தை சொன்னால் தான் தெரியுமா ?
மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல பேருந்தில் இலவச பாஸ் கொடுத்த அரசு கலைஞரின் அரசு
எல்லாரும் பாஸாகி பள்ளி படிப்பை முடித்தால் ,எளிதாக மருத்துவம்,பொறியியல் ,சட்டம் ,காலை கல்லூரிகளில் சேர்ந்து கல்லூரிகளில் சேர்ந்து பட்டதாரி ஆனால் கல்விக்கு என்ன மதிப்பு என்று சிந்திக்கும் படிப்பை கடினமாக வைத்திருந்த சைக்கோ கூட்டத்தின் பிடியில் இருந்து கல்வியை மீட்டு இந்தியாவில் பள்ளிகளில் தேர்ச்சி பெரும் மாணவ மாணவிகள்,கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவர்கள் GER சதவீதத்தில் முதலிடம் பெற முக்கிய காரணமய்யா கலைஞர்
மத்திய அரசு பல ஆயிரம் கோடி ஒதுக்கும் அய்ய்ம்ஸ் மருத்துவமனையில் இன்றும் பெரும்பான்மை நோயாளிகளுக்கு அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.இலவசமாக பெரும்பான்மை மக்கள் தமிழ்நாடெங்கும் மருத்துவம் பார்த்து கொள்ளும் வலுவான கட்டமைப்பை உருவாக்கியதில் கலைஞரின் பங்கு அளப்பரியது
பென்ஷனோடு பொங்கல் பரிசு வாங்கும் ஆசிரியையின் மகனாக ,இட ஒதுக்கீடு ,ஊக்க மதிப்பெண் மூலம் மருத்துவ படிப்பு படித்த மருத்துவனாக,இஸ்லாமிய ,கிருத்துவ உறவுகளோடு ,பல ஆயிரம் நட்பு ,சுற்றம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இலவசமாக பள்ளி படிப்பு படித்து ,ஸ்காலர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பு முடித்து, 69 சதவீத இட ஒதுக்கீடு ,அதிகரித்த அரசு ,தனியார் வேலைகள் , பெண்களுக்கான ,இட ஒதுக்கீடு,உள் ஒதுக்கீட்டு கோட்டா மூலம் பணி கிடைத்த தமிழ்நாட்டு குடிமகனாக கணக்கிட்டால் என் வங்கி கணக்கில் கலைஞர் போட்டது
எளிதாக கோடியை தாண்டும்

உழைப்பு தாழ்வு தரும்


சீர்திருத்தங்களுக்காக,துணிச்சலுக்காக , சமுதாய மாற்றங்களை கொண்டு வந்ததால் தோற்கடிக்கப்பட்ட விசித்திர தலைவர் கலைஞர்
கலைஞர் எடுத்த பெரும்பாலான முடிவுகளால் பயன்பெற்றவர்கள் அவரை தோற்கடித்தது தான் தமிழகத்தின் கடந்த நாப்பது ஆண்டு கால வரலாறு.1989 முதல்வராக பதவியேற்ற பிறகு ,திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் சில
பெண்களுக்கு சொத்துரிமை
பெண்களுக்கு அரசு பணிகளில் முப்பது சதவீதம் என்று முடிவெடுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.ஆண்களை எடுத்து கொண்டால் பத்தில் ஐந்து பேர் திமுகவாக இருப்பார்கள்.ஆனால் பெண்களில் பத்தில் இரண்டு,மூன்று தான்.எம்ஜிஆர் துவக்கிய காலம் முதல் ஜெஜெ அவர்கள் தோல்வி அடைந்த தேர்தல்கள் உட்பட பெண்களின் வாக்கு அதிமுகவுக்கு தான் அதிகம்..எங்கள் சமுதாயத்தில் படித்த பெண்கள் வெகு குறைவு.இதனால் எங்களுக்கு அதிக பாதிப்பு என்று இந்த முடிவை எதிர்த்தவர் மருத்துவர் ராமதாஸ்
பழங்குடி மக்களுக்கு தனியாக ஒரு சதவீத இட ஒதுக்கீடு செய்து 68 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு 69 சதவீதமானது.பழங்குடியினர் தவிர்த்து பட்டியல் இனத்தவருக்கு முழுமையாக 18 சதவீத இடங்கள் கிடைத்தது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் பிரிக்கப்பட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கப்பட்டது.மிக பெரும் அநியாயம் என்று போராடிய பாமகவும் குறை சொன்னது.பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வந்த சாதிகளின் தலைவர்களும் பொங்கி குதித்தனர்.
கிருத்துவ சமுதாயத்தினை வன்னியர்களுக்கு,மீனவர்களுக்கு தமிழ்நாட்டில் எம் பி சி கிடைக்க வழி செய்தார்.பாஜக ஆதரவு எனும் காலை சுற்றிய பாம்பு இலலாவிட்டால் வி பி சிங் அவர்களின் தேசிய முன்னை அரசு கிருத்தும்,இஸ்லாம் பின்பற்றும் பட்டியல் இன மக்களுக்கு பட்டியல் இனத்தின் கீழ் இட ஒதுக்கீடு செய்திருக்கும்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
பட்டதாரி இல்லா குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஊக்க மதிப்பெண். மருத்துவரின் மகனான அருமை தோழர் அரவிந்தன் கண்ணையன் அது என்ன மருத்துவர்களின் மகன்கள் தான் மருத்துவ கல்லூரிகளில் அதிக இடங்களை பிடிக்கிறார்களாமே .அதனை அழிப்பேன் என்று இந்த முடிவை கலைஞர் எடுத்தார் என்று சொல்லும் போது தான் சுரீர் என்று உரைத்தது.முதல் தலைமுறையிலேயே பொறியியல் ,மருத்துவம் பட்டதாரிகளை அதிகம் உருவாக்க முயற்சிப்பதால் அவருக்கு கிடைக்கும் அரசியல் ரீதியான பலன்கள் என்ன ?ஒன்றும் கிடையாது
இழப்பு மிக மிக அதிகம். எந்த சாதியாக இருந்தாலும் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த அதிகார வர்க்கத்தை முழுவதுமாக சினம் கொள்ள வைக்கும் முடிவு அது.இருந்தும் அதனை துணிந்து எடுத்து அதற்கான இழப்பை மிக அதிகமாக 1991 தேர்தலில் பெற்றார்.
இந்திய அமைதிப்படையை திரும்ப பெற வி பி சிங் தலைமையிலான மத்திய அரசில் பங்கு பெற்ற திமுக முக்கிய [அங்கு வகித்தது.இந்தியா திரும்பிய அமைதி படையினரை வரவேற்க இருக்கும் நடைமுறையான மாநில முதல்வர் செல்லும் நிகழ்வை புறக்கணித்த கலைஞரை இன்றும் அதற்காக திட்டும் ராணுவ அதிகாரிகளுக்கு குறைவு கிடையாது
கலைஞரும் திமுகவும் இலலாவிட்டால் விடுதலை புலிகள்,போராளிகளை அன்றே உருத்தெரியாமல் அழித்திருப்போம்..ஆனால் கலைஞரின் அழுத்தம் காரணமாக வி பி சிங் அவர்கள் எடுத்த முடிவினால் இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு பெரும் களங்கமாக இந்திய அமைதி படை நடவடிக்கை,வாபஸ் இருக்கும் என்று அன்றும் இன்றும் பேசாத ,எழுதாத ராணுவ உயர் அதிகாரிகள் வெகு குறைவு
பல சீர்திருத்த முடிவுகளை எடுத்த பிறகு கிடைத்த பரிசு 1989 பாராளுமன்ற தேர்தல் தோல்வி
.மண்டல் கமிஷனை முழுமையாக எதிர்த்த ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஜெஜெ அவர்கள் தலைமையிலான அதிமுகவோடு கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஒரு தொகுதியில் கூட வெல்லாத ,திமுக கூட்டணியில் cpi நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற சூழலுக்கு பின் இருந்த ஒரு வருடத்துக்கு குறைவான ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றில் சில
மண்டல் கமிஷன் பரிந்துரை நிறைவேற்றம் ,புத்த மதம் தழுவிய பட்டியல் இனத்தோருக்கு பட்டியல் கீழ் ஒதுக்கீடு.அண்ணலுக்கு பாரத் ரத்னா , காவிரி நடுவர்நீதி மன்றம் அமைப்பு என அனைத்திலும் திமுகவுக்கு முக்கிய பங்குண்டு
.மிக தெளிவாக காங்கிரஸ் ,அதன் தலைவர் ராஜீவ் மண்டல் கமிஷனுக்கு எதிரான நிலை எடுத்த பிறகும் ,ஈழத்தில் போராடும் போராளி குழுக்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் ஆளுநர் ஒத்து கொண்டு சம்மதிக்காத சூழலிலும் otherwise பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆர் வி ,காங்கிரஸ் ஆதரவுடன் இயங்கிய சந்திரசேகர் அரசு பரிந்துரையின் பேரில் ஆட்சியை கலைத்த பிறகு நடந்த தேர்தலில் கலைஞர் ஒருவரை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை பரிசாக தந்த மாநிலம் தமிழகம்

விறகை எரித்து விமானம் ஓட்டும் வீலர்களும் ஹீலர்களும்


மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பின் போது இறப்பு நிகழாதா என்று பல இயற்கை அறிவாளிகள் அற சீற்றம் கொண்டு பொங்கும் கேள்விகள் பல இடங்களில் இருந்து வருகின்றன .வீட்டில் பிரசவம் பார்க்க சொல்லி தருகிறேன் என்பதை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை கிண்டல் செய்து மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் மருத்துவமனையை மூடி விடுவீர்களா என்றும் கேள்விகள் வந்து கொட்டுகின்றன.
அறுவை சிகிச்சை நிபுணரான என் நண்பருக்கு இந்தியாவின் சிறந்த ராணுவ மருத்துவமனைகளில் ஒன்றான கொல்கத்தா ராணுவ மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.ஆனால் பிரசவத்தின் போது ஏற்பட்ட ஒரு உடல்நல குறைபாடு காரணமாக சுற்றிலும் பல சிறந்த, பல்லாண்டு அனுபவம் உள்ள மருத்துவர்கள் இருந்தும் தாயை காப்பாற்ற முடியவில்லை.மரணம் எங்கும் நிகழலாம்.ஆனால் அதனை தடுக்க ,அது போன்ற சூழல் வரக்கூடிய நிலைகளை வராமல் தடுக்க
அனைத்து முயற்சி ,ஆராய்ச்சி எடுப்பது தான் அறிவியல் சார்ந்த மருத்துவம்.
விமான விபத்து நடந்தால் விமான நிலையங்களை மூடி விடுவீர்களா, கப்பல் கவிழ்ந்தால் கப்பல் போக்குவரத்தை மூடி விடுவீர்களா என்றும் இதே போல கேட்கலாம்
விபத்துக்களை தடுக்க முடியாது .ஆனால் பறக்க சொல்லி தருகிறேன் என்று மலை உச்சிக்கு மக்களை அழைத்து சென்று குதிக்க வைக்கும் முயற்சியை ,நடு கடலில் சென்று நடக்க சொல்லி தருகிறேன் என்று சொன்னால் விட்டு விட வேண்டுமா ?
விமானம் ஓட்ட,தயாரிக்க ,அதனை பரிசோதிக்க ,விபத்தை தடுக்க பல்வேறு விதிகள்,முறைகள் உண்டு. இது மருத்துவமனைகளுக்கு பொருந்தும்.அதனையும் மீறி விபத்துகள் நிகழும்.அதில் இருந்து பாடம் கற்று அந்த குறைகள் சரி செய்யப்படும்.இது மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்
முதல்முதலில் விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தை இப்போது ஓட்ட முயற்சித்தாலும் அப்படி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.அந்த விமானங்களில் விபத்துக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.அதனை விட ஆற்றல் வாய்ந்த ,விபத்துக்களை பெருமளவு குறைக்க கூடிய நவீன விமானங்கள் வந்து விட்டதால் அதனை பயன்படுத்துவதே குற்றம் தான்.
இது மருந்துகளுக்கும் ,பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கும் பொருந்தும்.மயக்கவியல் துறையில் பெரும்புரட்சியை ஏற்படுத்திய க்ளோரோபார்ம் மருந்தை இப்போது யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.பயன்படுத்தினால் தண்டனை தான்.சென்ற நூற்றாண்டில் இருந்த பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளும்,மருந்துகளையும் இப்போது பயன்படுத்துவது குற்றம்
அறிவியல் என்பதன் அடிப்படையே புரியாத கூட்டம் ஒன்று உருவாகி இருப்பது மிகவும் வேதனையான ஒன்று.விறகு எரித்து விமானத்தை ஓட்டுகிறேன் என்பதற்கும் அவரவரே அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்,பிரசவம் பார்த்து கொள்ளலாம் ,உணவே மருந்து,கோமியமே அருமருந்து என்பதற்கும் வித்தியாசம் கிடையாது.ஆனால் மின்சாரம்,ஆயுதம்,வாகனங்கள் ,தொலை தொடர்பு சாதனங்கள்,செயற்கைகோள் என்று வரும் போது விஞ்ஞான மாற்றங்களை பயன்படுத்தி கொள்ளும் கூட்டம் ,அதன் துணையோடு மருத்துவ துறையை அடித்து துவம்சம் செய்வதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை